உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் 5 பேர் கொண்ட கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்தப் பெண் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதே நாட்டை உலுக்கிய நிலையில், உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், அந்த இளம் பெண் தனது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் இறுதியாக பேசியது வெளியாகியுள்ளது. அவர் இறுதியாக பேசுகையில், "என்னைக் காப்பாற்றுங்கள், நான் சாகக் கூடாது. அவர்கள் தூக்கிலிடப்படுவதை நான் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தில்லி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், "அவர் வேதனையில் இருந்தார். தன்னைக் காப்பாற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார்" என்றார்.