அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள்தான்: மக்களவையில் அமித் ஷா பேச்சு

அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள்தான் என்று மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது அமித் ஷா பேசியுள்ளார்.
அமித் ஷா
அமித் ஷா

புது தில்லி: அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள்தான் என்று மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது அமித் ஷா பேசியுள்ளார்.

மக்களவையில் திங்களன்று மசோதாவை தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது :

குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு பூஜ்யம் புள்ளி பூஜ்யம் பூஜ்யம் ஒரு சதவிகிதம் கூட எதிரானது அல்ல. அன்றைக்கு இந்திரா காந்தி, 14வது சட்டப்பிரிவை மேற்கோள் காட்டி பங்களாதேஷில் இருந்து மக்களை அழைத்து வருவதற்காக கூறினார். ​​அப்போது ஏன் பாகிஸ்தானை பற்றி சொல்லவில்லை.இத்தனை ஆண்டுகளில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்களை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் இது போன்று வேறு எங்கும் இல்லை. அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன் கார்டை பாருங்கள். அதில் இதேபோன்றே கடுமையான விதிமுறைகள் உள்ளன. இந்தியா அருகே மூன்று அண்டை நாடுகள் உள்ளன. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அதில் அடங்கும். இவர்களின் நிலப்பகுதியில் இஸ்லாம்தான் அவர்களின் சட்டமாக உள்ளது என்று அந்த அரசியலமைப்பு சட்டங்கள் கூறுகின்றன.

நாட்டின் பிரிவினையின் போது, ​​சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே நேருவிற்கும் லியாகத்திற்குமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இந்தியாவில் முறையாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர்.

பாஜக நாட்டை பிளவுபடுத்தவில்லை. ஆனால், காங்கிரஸ்தான் அதை செய்தது. இந்த மசோதா முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறிக்கும் என்று கூறவில்லை. காங்கிரஸ் இந்த நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்தது. இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவார்கள். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அநீதி ஏற்படும் என கேள்வி எழுப்புவதே தவறு. 1947ம் ஆண்டில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களை எல்லாம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் இருப்பார்கள். அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள் தான்.

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com