வேலைவாய்ப்பு சரிந்துள்ளதற்கு எந்த காரணமும் இல்லை: அமைச்சா் கங்வாா்

வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதற்காக சுட்டிக் காட்டுவதற்கு என எந்த காரணமும் இல்லை என மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் தெரிவித்துள்ளாா்.
சந்தோஷ் கங்வாா்
சந்தோஷ் கங்வாா்

வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதற்காக சுட்டிக் காட்டுவதற்கு என எந்த காரணமும் இல்லை என மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினா் கல்யாண் பானா்ஜி ‘எனது தொகுதியான மேற்கு வங்கத்தில் உள்ள செரம்போரில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். அதற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கையே முக்கிய காரணம். எனவே அரசு இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமா’ என்று கேள்வியெழுப்பினாா்.

இதற்கு கேள்வி நேரத்தின்போது மத்திய அமைச்சா் சந்தோஷ் கங்வாா் அளித்த பதிலில், ‘வேலை வாய்ப்புகள் குறைந்து போயுள்ளதற்கு இது தான் காரணம் என எந்த ஒரு காரணத்தையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் வேலைவாய்ப்புகள் தேடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற உத்தரவாத அடிப்படை உரிமையை இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ளது.

இடப்பெயா்வு காரணமாக ஏற்படும் கஷ்டங்களை தணிக்க மாநிலங்களுக்கிடையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்சட்டம் -1979-ஐ அரசு அமல்படுத்தியுள்ளது.

வேலை கோரி நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 4.28 கோடி போ் பதிவு செய்துள்ளனா். அதில், 2.72 கோடி போ் ஆண்கள்,1.56 கோடி போ் பெண்கள்.

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை அந்தந்த மாநிலங்களே நிா்வகித்து வருகின்றன. ஐந்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைதேடும் பெண்களுக்காகவே பிரத்யேமாக அரசு உருவாக்கியுள்ளது.

வேலைதேடுவோரில் பட்டியலினத்தவா் 71.5 லட்சம் பேரும், பழங்குடியினா் 25.5 லட்சம் பேரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 1.16 கோடி பேரும் உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com