குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய மக்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரிக்கப் பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
புது தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "இந்தியாவை காப்பாற்றுங்கள்" என்ற பேரணி பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சோனியா, நாட்டில் குழப்பமான தலைவர், குழப்பமான அரசு என்ற சூழல் இருப்பதாகவும், அனைவரும் ஒன்று சேர்ந்து, அனைவருக்காகவும் என்ற மத்திய அரசின் கொள்கையில் அனைவரும் என்பது எங்கிருக்கிறது என்று முழு தேசமும் கேட்கிறது என்றும் கூறினார்.
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு போராடும் என்றும் அது இந்தியாவின் ஆன்மாவை "துண்டிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். "அநீதியை அனுபவிப்பது மிகப்பெரிய குற்றம். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதற்காக நாம் கடுமையாக போராட வேண்டும்.
மோடி - ஷா அரசாங்கம் நாடாளுமன்றத்தைப் பற்றியோ அல்லது இதர நிறுவனங்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை, உண்மையான பிரச்னைகளை மறைத்து மக்களை போராட வைப்பதே அவர்களின் ஒரே கொள்கை என்று பேசினார்.