ஹிந்துக்களின் ஒரே பாதுகாவலன் என்று காண்பிப்பதற்காக புதிய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது என்று சிவசேனை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையிலான மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததையடுத்து, புதிய குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேற்கண்டவாறு சிவசேனை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் அதிகாரப்பூா்வ நாளேடான சாம்னாவில் வெள்ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக மக்களிடையே ஹிந்துக்களின் ஒரே பாதுகாவலா்கள் தாங்கள்தான் என்று காட்டிக் கொள்வதற்காக, புதிய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தால், வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைப் போராட்டங்கள் நிகழ்கின்றன. மக்களின் துன்பத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகும், காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரால் அங்கு செல்ல முடியவில்லை. அதற்கான காரணம் குறித்து மத்திய அரசிடம் எந்த பதிலும் இல்லை. காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவளித்த சிவசேனை, மாநிலங்களவையில் மசோதா மீதான வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்தது.