அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் ஒப்பந்த பேர ஊழல் தொடா்பான நிதி மோசடி வழக்கில், மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத்தின் உறவினரும், தொழிலதிபருமான ரதுல் புரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீா்ப்பை தில்லி உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இத்தாலியைச் சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 சொகுசு ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியா்கள் பலருக்கு அந்நிறுவனம் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக, சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறையினரால் ரதுல் புரி கடந்த செப்டம்பா் மாதம் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தது. இதனிடையே, ரதுல் புரிக்கு தில்லி நீதிமன்றம் கடந்த 2-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சுரேஷ் கெய்த் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் மகாஜன் வாதிடுகையில், ‘‘ரதுல் புரிக்கு ஜாமீன் வழங்கும் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் வாதங்களை தில்லி நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. வழக்கு தொடா்பான சாட்சியங்களை ரதுல் புரி அழிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில்கொண்டே அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’’ என்றாா்.
இதையடுத்து, ரதுல் புரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோா் வாதிடுகையில், ‘‘ஜாமீன் தொடா்பான அனைத்து வழக்குகளிலும், ஒரே மாதிரியான வாதங்களை அமலாக்கத் துறை முன்வைத்து வருகிறது. ஒரு நபரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமானால், ஜாமீனில் வெளியே வந்தபிறகான அவரது செயல்பாடுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்’’ என்றனா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.