65 வயதான கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், 66 வயதான தனது 20 ஆண்டு கால நண்பர் மற்றும் காதலரை கைப்பிடிக்கும் நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழவிருக்கிறது.
கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்தார். லட்சுமி அம்மாள் கணவரின் உதவியாளராக வேலை செய்தவர் கோச்சானியன். கணவர் மறைந்த பிறகு லட்சுமி அம்மாளை கோச்சானியன் தான் கவனித்து வந்தார். லட்சுமி அம்மாளின் கணவர் மரணப்படுக்கையில் இருந்த போது, மனைவியை கவனித்துக்கொள்ளும்படி அவர் கோச்சனியனிடம் கூறிவிட்டு மறைந்தார். அதன்பேரில், கடந்த 21 ஆண்டுகளாக லட்சுமி அம்மாளை கவனித்து வருகிறார் கோச்சானியன்.
இவர்களின் 20 ஆண்டு கால நட்பு தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. தற்போது 65 வயதான லட்சுமி அம்மாள், 66 வயதான கோச்சானியனை திருமணம் செய்யத் தயாராகியுள்ளார். வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் திருமணமானது, அரசு முதியோர் இல்லத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து லட்சுமி அம்மாள் கூறுகையில், 'நாங்கள் நீண்ட காலமாக காதலித்து வருகிறோம். இறுதியாக திருமணம் நடக்க உள்ளது. இது 20 வருட உறவாகும். இந்த உறவு இறுதியில் திருமணத்தில் முடிவடைவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார். முதுமை காரணமாக இருவருமே தற்போது முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளனர்.
'எங்கள் விருப்பத்தை நனவாக்க எல்லோரும் எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கோச்சனியான் கூறினார். இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்துள்ள முதியோர் இல்ல கண்காணிப்பாளர் வி.ஜி.ஜெயகுமார், 'இந்தத் திருமணமானது மறக்கமுடியாத விழாவாக இருக்கும்' என்று கூறினார்.