புது தில்லி: இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றிருக்கும் உச்ச நீதிமன்றம், இது குறித்து மாநில அரசுகள் மற்றும் உயர் நீதிமன்றங்களிடம் அறிக்கைக் கேட்டுள்ளது.
2012ம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிர்பயா குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, நாட்டில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறித்து அதிர்ச்சி வெளியிட்ட உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளில் நீதி கிடைக்க தாமதமாவதால், போராட்டங்கள், வெறுப்பு மற்றும் மக்கள் மனதில் கொந்தளிப்பு நிலை ஏற்பட வாய்ப்பை உருவாக்கிவிடும் என்று தெரிவித்தது.
மேலும், நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்து 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகளுக்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், பாலியல் வழக்கு விசாரணை, சேகரிக்கப்பட்ட தடயங்கள், தடயவியல் மற்றும் மருத்துவ ஆதாரங்கள், பாதிக்கப்பட்ட நபர் அளித்த வாக்குமூலம், வழக்கு விசாரணையின் கால அளவு உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.