புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக, புது தில்லியின் சில பகுதிகளில் செல்போன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மட்டும் செல்போன் சேவைகளை நிறுத்துமாறு, செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, ஒரு சில இடங்களில், செல்போன் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. செல்போன்களில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது மற்றும் இணையதள சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
போராட்டம் எதிரொலியாக இன்று காலை 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தில்லி மெட்ரோ ரயிலின் 14 ரயில் நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.
தில்லியின் செங்கோட்டை பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.