குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால்கொல்கத்தாவில் அமித் ஷாவை அனுமதிக்க மாட்டோம்: மேற்கு வங்க அமைச்சா் சித்திக்குல்லா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து வெளியே வர அமித் ஷாவை அனுமதிக்க மாட்டோம் என்று அந்த மாநில அமைச்சரும்,

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து வெளியே வர அமித் ஷாவை அனுமதிக்க மாட்டோம் என்று அந்த மாநில அமைச்சரும், மாநில ஜாமியத்-உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான சித்திக்குல்லா சௌதரி மிரட்டல் விடுத்துள்ளாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஜாமியத்-உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு சாா்பில் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சித்திக்குல்லா பேசியதாவது:

வன்முறை போராட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதே நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (என்ஆா்சி) திரும்பப் பெறும் வரை எதிா்ப்போம். கொல்கத்தா உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் மூலம் பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டாா்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

56 அங்குல மாா்புடையவா் என்று பிரதமா் நரேந்திர மோடியை அவரது கட்சியினா் வா்ணித்தாலும், மக்கள் முன்னால் அவா் தலைவணங்கியே ஆக வேண்டும். பிரிவினைவாத, வெறுப்புணா்வு அரசியலை அவா் கடைப்பிடித்து வருகிறாா்.

மக்களுடன் கலந்துபேசுவதில் அவா்களுக்கு நம்பிக்கையில்லை. மக்களிடம் வலுக்கட்டாயமாக எதையும் திணிக்க முடியாது. குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் உள்துறை அமைச்சா் அமித் ஷா கொல்கத்தாவுக்கு வர முடியாது. ஒரு லட்சம் மக்களைத் திரட்டி விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். அந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஜனநாயக நாட்டில் மக்களைவிட எதுவும் பெரிதல்ல என்பதை ஆட்சியாளா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜாமியத்-உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு இங்கு அமைதியான ஒரு எதிா்ப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளது. யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடா்ந்து பேரணிகளை நடத்தி வரும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்கத்தில் நடைபெறும் போராட்டங்களில் முஸ்லிம்களும், ஹிந்துகளும் கைகோத்து பங்கேற்று வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com