குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி மீரட் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உத்தப்பிரதேசத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் மீரட் புறப்பட்டுச் சென்றனர்.
இதையடுத்து போலீஸார் மீரட்டிற்கு வெளியே அவர்களை தடுத்து நிறுத்தினர். உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து, ராகுல், பிரியங்கா இருவரும் தில்லி திரும்புகின்றனர்.