ஆந்திரத் தலைநகர் அமராவதியில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டது.
அமராவதியில் ஏழுமலையான் கோயிலைக் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்கு நிலம் வழங்கக் கோரி ஆந்திர அரசை நாடியது. ஆந்திர அரசும் 25 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்துக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்தது. அந்த இடத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் ஏழுமலையான் கோயிலைக் கட்டுவதற்கு வரைபடம், திட்ட அறிக்கை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் தயாரித்தது. அதன்பின் கடந்த மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற நிலத்தை உழும் சடங்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு பங்கேற்று, ஏர்பூட்டி உழுதார்.
அப்போது அந்த நிலத்தை பூமி பூஜைக்காக தேவஸ்தானம் தயார் செய்தது. அந்த இடத்தில் கடந்த 10 தினங்களாக ஆன்மிக நிகழ்ச்சிகள், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை நடைபெற்று வந்தன.
இந்நிலையில் அந்த நிலத்தில் தேவஸ்தான அர்ச்சகர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு மகாபூர்ணாஹுதி நடத்தி, பூமி பூஜை செய்து அடிக்கல்லை நாட்டினர். இந்த நிகழ்வில் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கு ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது.