புது தில்லி: ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, அம்மாநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தில்லியில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார்.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திர பவனில் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், மாநில அரசு ஊழியர் சங்கம், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன், ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்திலும், ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் சந்திரபாபு நாயுடு மரியாதை செலுத்தினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து, மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து, விஜயவாடாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி தனது பிறந்த தினத்தன்று சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக கூறி, கடந்த ஆண்டு கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.