ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை நடத்தியத் தாக்குதலில், 7 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.
லால் சௌக் பகுதியில் உள்ள திரையரங்கம் அருகில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடத்தினர். இதில் 4 போலீஸார், 3 சிஆர்பிஎஃப் படையினர், 4 பொது மக்கள் என மொத்தம் 11 பேர் காயமடைந்தனர். இதில் பெண்கள் 2 பேரும் அடங்குவர்.
தாக்குதலில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ஸ்ரீநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஸ்ரீநகர் தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை போலீஸார் தரப்பில் உறுதி செய்யவில்லை.