இந்திய பிரதமர் மோடியின் டிவீட்டால் இணைந்த காதல் ஜோடி கடந்த 10-ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர்.
பஞ்சாப் மாநிலம் குச்ரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் மகேஷ்வரி (26). இவர் பிரதமர் நரேந்திர மோடி மீது நன்கு மரியாதை கொண்டவர். அதனால், பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு டிவீட்டை இவர் லைக் செய்துள்ளார். அதே டிவீட்டை இலங்கையை சேர்ந்த ஹர்ஷினி எதீரிசிங்கே என்ற பெண்ணும் லைக் செய்துள்ளார். இதன்மூலம், அவர்கள் இருவரும் 2015-இல் நண்பர்களாகியுள்ளனர்.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் 2017-ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.
இந்திய கலாச்சாரத்தை புரிந்துகொள்வதற்காக ஹர்ஷினி இந்தியாவில் படிக்க விரும்பினார். அதேசமயம், கோவிந்த் பொறியியல் படிப்பை முடித்திருந்தார்.
இதனிடையே இவர்களது காதல் விஷயத்தை அறிந்து கொண்ட ஹர்ஷினியின் தந்தை, கோவிந்தை இலங்கைக்கு அழைத்து 2 மாதம் தங்களுடன் தங்கவைத்தார். அப்போது, ஹர்ஷினியின் குடும்பத்தாருக்கு கோவிந்தை பிடித்துள்ளது. அதன்பிறகே, இவர்களது காதலுக்கு ஹர்ஷினியின் தந்தை பச்சை கொடி காட்டியுள்ளார். ஹர்ஷினியின் குடும்பத்தினர் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். கோவிந்தும் சைவம் என்பதால் அவர்களுக்கு இந்த விவகாரமும் தடங்கலை ஏற்படுத்தவில்லை.
இதையடுத்து, இவர்கள் இருவரும் காதலர் தினத்துக்கு 4 நாட்கள் முன்னதாக கடந்த 10-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.