நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு: தலைவர்கள் புகழாரம்

மறைந்த முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருதுபெற்றவருமான வாஜ்பாயின் திருவுருவப்படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில்
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப் படத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப் படத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 


மறைந்த முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருதுபெற்றவருமான வாஜ்பாயின் திருவுருவப்படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ராஜகோபாலாச்சாரியார், சர்தார் வல்லபபாய் படேல், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பால கங்காதர திலகர், ரவீந்திர நாத் தாகூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் உருவப் படங்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அலங்கரிக்கின்றன. 
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவப் படத்தையும் மைய மண்டபத்தில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, லோக் அபியான் சார்பில் வாஜ்பாயின் ஆளுயரத் திருவுருவப் படம் வழங்கப்பட்டது. 
இந்த படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்து, அந்தப் படத்தை வரைந்த ஓவியர் கிருஷ்ண கனையையும் பாராட்டினார்.
ராஜதந்திரியாகத் திகழ்ந்தவர்: இந்த நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: இந்தியாவின் ராஜதந்திரியாகத் திகழ்ந்தவர் வாஜ்பாய். 1998-இல் நடந்த பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் உள்ளிட்ட சவாலான தருணங்களில் அவருடைய தீர்க்கமான தலைமைக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். இந்தியா ஒரு அமைதியான, ஸ்திரமான மற்றும் பலம் வாய்ந்த நாடாக உருவாவதில் அவருடைய பங்களிப்பு அளப்பரியது. பொது வாழ்க்கையில் அவர் கண்ணியத்தின் உதாரண புருஷர். எதிர்மறையான சூழ்நிலையிலும் வைராக்கியத்துடன் பொறுமை காத்தவர். 
பத்திரிகையாளராகவும், மக்களவையில் 10 முறை உறுப்பினராகவும், மாநிலங்களவையில் 2 முறை உறுப்பினராகவும் இருந்தவர். 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானதாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர். அவரது கனவை நினைவேற்ற ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றார் ராம்நாத் கோவிந்த்.
 தொலைநோக்குப் பார்வை கொண்டவர்: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், தனது உள்ளார்ந்த தலையீடு, முன்மாதிரி நடத்தை ஆகியவற்றின் மூலம் ஜனநாயக வேர்களை நாடாளுமன்றத்தில் பலப்
படுத்தியவர் வாஜ்பாய். மேலும், ஒரு நல்ல நிர்வாகத்தின் மூலம் ஜனநாயகத்தை எப்படி ஆழமாக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர். அவர் தொலை நோக்குப் பார்வை கொண்ட தலைவராக விளங்கினார். நாடாளுமன்றத்தில் நல்லதொரு கலந்துரையாடல், விவாதம், முடிவுகள் எடுப்பதற்கான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும். பொதுவாழ்க்கையில் நாடாளுமன்றம் புதிய தரத்தை உருவாக்க வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும் என்றார்.
பொது நலனுக்கு குரல் எழுப்பியவர்: பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நம்மை வாழ்த்தவும், ஊக்குவிக்கவும் நாடாளுமன்ற மைய அரங்கில் வாஜ்பாய் என்றென்றும் வீற்றிருப்பார். பன்முகத் தன்மை, மக்கள் மீதான நேசம், மனித நேயம் ஆகியவற்றுக்காக நினைவுகூரப்படுவார். அவர் பொது நலனுக்காகக் குரல் எழுப்பியவர். தன்னுடைய கொள்கைகளில் இருந்து விலகாதவர். சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவருடைய வார்த்தைகளைப் போல அவரது அமைதியும் மிகவும் பலம் வாய்ந்தது. ஜனநாயகத்தில் எதிரிகள் யாரும் இல்லை. ஆனால், அரசியல் போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர் எனும் ஒரு முக்கியச் செய்தியை அவரிடமிருந்து நாம் எடுத்துச் செல்ல முடியும் என்றார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இல்லாமல் இருந்தால், இந்தியாவாக இருக்காது என்பார் வாஜ்பாய். அரசின் குறைகளை விமர்சித்த வாஜ்பாய், அதன் சாதனைகளையும் பாராட்டியவர். அரசியல் போட்டியாளர்கள் மீது ஒரு போதும் கசப்பான வார்த்தைகளை வீசியது இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com