பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அதிர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கும் நோக்கில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வந்தது. 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் புளு ஸ்டார் நடவடிக்கை மூலம் அந்த பயங்கரவாத இயக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டது. எனினும், அந்த நடவடிக்கை காரணமாகவே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குகிறதா? இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அதிர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பஞ்சாபில் கடந்த 2016-17 காலகட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பாக 5 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதம் அங்கு மீண்டும் தலையெடுக்காமல் தடுக்க ரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையும் மேம்பட்டுள்ளது. மாநிலத்தில் எந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தாலும், அதில் பயங்கரவாதத் தொடர்பு உள்ளதா? என்பது தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் மாநில காவல் துறையும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.