ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே புதன்கிழமை நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பட்காம் மாவட்டத்தின் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. இந்த மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹிலால் முகமது வானி மற்றும் முகமது லோனி என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவர்கள் பொதுமக்களை தாக்கியது, ராணுவ முகாம்களை தாக்கியது உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்காக காவல் துறையினரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவர்கள். பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை அழைத்துச் செல்வது உள்ளிட்ட செயல்களிலும் ஹிலால் முகமது வானி ஈடுபட்டுள்ளார். அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வெடிபொருள்கள், ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று அவர் கூறினார்.