2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் மோடி கட்டமைத்த பிம்பம் அனைத்தும் 100 சதவீதம் தோல்வியடைந்துள்ளது என்பதை புல்வாமா தாக்குதல் வெளிப்படுத்துகிறது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புணேவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் முன் தேர்தல் பிரசாரங்களில் மன்மோகன் சிங் அரசு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டவில்லை என்று தொடர்ச்சியாக கூறி வந்தது எனக்கு நினைவில் உள்ளது. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதற்கான திறன் மன்மோகன் அரசிடம் இல்லை என்றார். மேலும், 56 இன்ச் மார்புகளை கொண்டவர்களால் மட்டுமே பாகிஸ்தானுக்கு கடுமையான பாடத்தை புகட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தற்போது என்ன நடந்திருக்கிறது என்பதை அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அன்றைக்கு அவர் வைத்த அதே கோரிக்கையை நான் இங்கு வைக்கப்போவதில்லை. 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் மோடி கட்டமைத்த பிம்பம் அனைத்தும் தற்போது 100 சதவீதம் தோல்வியடைந்துள்ளது.
புல்வாமா தாக்குதலின் வீரியத்தை பார்க்கும் போது சாதாரண மக்களால் இதை அரங்கேற்றிவிடமுடியாது என்பது தெரிகிறது. இதுபோன்ற வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுவாக ராணுவத்திடம் தான் இருக்கும். இந்திய ராணுவத்திடம் இருந்து அதை பெற்றிருக்க முடியாது. அதனால், அண்டை நாடு தான் இந்த ஆயுதங்களை பயங்கரவாதிகளுக்கு அளித்திருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.
தாக்குதல் நடத்திய விதத்தை பார்த்தால், பயங்கரவாதிகளுக்கு நிபுணர்கள் தான் பயிற்சி அளித்திருக்க வேண்டும். அதன்படி ராணுவம் தான் அந்த பயிற்சியை அளித்திருக்கக்கூடும். அதனால், அவர்களுக்கு அண்டை நாட்டு மண்ணில் இருந்து தான் பயிற்சி கிடைத்திருக்கிறது.
வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு ஒரு சில பயங்கரவாதிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வு இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்பதை வெளிப்படுத்துகிறது.
தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை உள்ளது.
தேவைப்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டப்பட்டும். அதன்மூலம், இதுபோன்ற நேரத்தில் நாடே ஒற்றுமையாக உள்ளது என்ற செய்தி வெளியே செல்லும்" என்றார்.