மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவராக இருந்த சுஷீல் சந்திரா, தற்போது தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். சுஷீல் சந்திராவின் பதவியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயின்றவரான சுஷீல் சந்திரா, கடந்த 1980-ஆம் ஆண்டு பிரிவில் இந்திய வருவாய் துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது சுனில் அரோரா, தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ளார். ஏற்கெனவே தேர்தல் ஆணையராக உள்ள அசோக் லாவாஸாவுடன் தற்போது நியமிக்கப்பட்டுள்ள சுஷீல் சந்திரா- என இரண்டு தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்.