புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பாகிஸ்தானின் தூண்டுதல் இந்தியா கடுமையாக விமரிசித்து வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதற்கட்டமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு என்ற அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. அதன்பிறகு, இந்திய வெளியுறவுத் துறை செயலர் சர்வதேச அளவில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்களை அழைத்து புல்வாமா தாக்குதல் குறித்தும், பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதையும் விளக்கியதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
"புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு என்ற அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது" என்றார்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பிரதான பொருட்களாக பழங்கள், சிமெண்ட், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவை உள்ளன. 2017-18 ஆம் ஆண்டு நிலவரப்படி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு சுமார் 3,482.3 கோடியாக உள்ளது.