பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 காஷ்மீரில் தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது குறித்தும், அந்த தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் நேரிட்டது என்ற செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயத்துக்கு பயங்கரவாதம் பொதுவான எதிரியாகும். ஆதலால் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது.
 புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த (தெற்காசியா) பிராந்தியத்தில் உள்ள நாடுகள், பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிப்பதிலும், இப்பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தங்களிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங், புல்வாமாவில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். அதேநேரத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா. மூலம் நடவடிக்கை எடுக்க இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு சீனா ஆதரவளிப்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
 புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா. மூலம் நடவடிக்கை எடுக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com