சிஆர்பிஎஃப் வீரரின் பெற்றோருக்கு பஞ்சாப் முதல்வர் நேரில் ஆறுதல்
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த பஞ்சாபைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரரின் பெற்றோரை அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுக்கு மாநில அரசு சார்பில் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குல்விந்தர் சிங்கும் ஒருவர். இந்நிலையில், அந்த வீரரின் சொந்த கிராமமான ரெüலிக்கு முதல்வர் அமரீந்தர் சிங் ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு, அவரது பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, மாநில அரசு சார்பில் அவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஏற்கெனவே அந்த வீரரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக ரூ.7 லட்சம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார்.
இது தவிர ரெüலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு குல்விந்தர் சிங் பெயர் சூட்டப்படும் என்றும், அந்த கிராமத்தில் உள்ள சாலையும் அவரது பெயரிலேயே அழைக்கப்படும் என்றும் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் அமரீந்தர் சிங்குடன், மாநில சட்டப் பேரவைத் தலைவர் ராணா கேபியும் உடன் சென்றார். காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களும் அவர்களுடன் இருந்தனர். அப்போது, செய்தியாளர்கள் புல்வாமா தாக்குதல் அரசியலாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்க மறுத்த அமரீந்தர் சிங், நாட்டுக்காக உயிர்நீத்த வீரரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வந்துள்ள இடத்தில் அரசியல் பேச்சுகளுக்கு இடமில்லை என்று கூறிவிட்டார்.