இந்திய பாதுகாப்பு படைகள் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் காரணமாக, பயங்கரவாதிகள் விரக்தியடைந்து காணப்பட்டதை உணர்ந்ததாலேயே புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் தூண்டிவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
ஒடிஸா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாத்ரக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பயங்கரவாதத்தை வளர்த்து வரும் நாடு பாகிஸ்தான். கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நமது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக அவர்கள் விரக்தியடைந்தனர்; வெறுப்படைந்து காணப்பட்டனர். அதை பாகிஸ்தான் உணர்ந்து கொண்டதாலேயே புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகம் வீண் போகாது. ஒட்டுமொத்த தேசமும் தற்போது ராணுவத்தின் பின்னால் நிற்கிறது. எதிரிகளுக்கு நமது ராணுவத்தினர் நிச்சயமாக சரியான பாடம் புகட்டுவர் என்றார் ராஜ்நாத் சிங்.
முன்னதாக, ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, பயங்கரவாத செயல்களுக்கு எதிராக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைளுக்கு முழு ஆதரவளிப்போம் என்று அனைத்து கட்சிகளும் உறுதியளித்தன.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.