அரசியல் பேச்சுகளால் மட்டுமே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடாது; புல்வாமா தாக்குதலுக்கு பழிதீர்ப்போம் என்ற உறுதியை, பிரதமர் மோடி செயலில் காட்ட வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.
மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து, தற்போது மோடியை சிவசேனை சாடியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் திங்கள்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
புல்வாமா தாக்குதலுக்கு பழிதீர்ப்போம் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். தனது உறுதியை, அவர் செயலில் காட்ட வேண்டும். அரசியல் பேச்சுகளால் மட்டுமே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணவோ அல்லது வீரர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்தவோ முடியாது. சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் அரங்கேற்றுவது தொடர்கதையாக உள்ளது.
பாகிஸ்தானுக்குள் புகுந்து, அல்-காய்தா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா அழித்ததைப் போன்ற தாக்குதலை நடத்துவதுதான் உண்மையான துல்லியத் தாக்குதலாகும். அரசியல் எதிரிகள் மீது அல்லாமல் பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதலை நடத்த வேண்டிய நேரம் இது. இச்சம்பவத்தை வைத்து அரசியல் செய்யாமல், நமது ராணுவத்தின் பின்னால் ஆதரவாக நிற்க வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.