இருநாடுகளின் முக்கிய பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது: சவூதி இளவரசர், பிரதமர் மோடி கூட்டறிக்கை

சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
இருநாடுகளின் முக்கிய பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது: சவூதி இளவரசர், பிரதமர் மோடி கூட்டறிக்கை

ஒருநாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு வந்த சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

தில்லியில் புதன்கிழமை பிரதமர் மோடியும், முகமது பின் சல்மானும் அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்தினர். அப்போது, பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவி வருவது குறித்து இந்தியாவின் அதிருப்தியை அவரிடம் மோடி தெரிவித்தார். இது தவிர பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, கூட்டு ராணுவப் பயிற்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்தினார்கள். 

முகமது-பின்-சல்மான் சவூதி அரேபிய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதில், 5 ஒப்பந்தங்கள் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு குறித்த விஷயங்கள் இடம்பெற்றன. அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவுக்கு சவூதி அரேபியா மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய நட்பு நாடாகும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக வளர்ந்துள்ளது. இந்திய உள்கட்டமைப்பில் சவூதி முதலீடு செய்வதை வரவேற்கிறேன். உலகளவிலான சூரிய மின்சக்தி உற்பத்தியில் சவூதி அரேபியாவும் இணைந்துள்ளது வரவேற்புக்குரியது. 

இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை பரப்பும் நாடுகள் மீது மேற்கொண்டு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், பயங்கரவாதம் தான் இருநாடுகளின் முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே அதை ஒழிப்பதில் உளவுத்துறை உட்பட அனைத்து விதமாகவும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று எங்கள் நண்பன் இந்தியாவுக்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒளிமையமான வருங்காலம் அமைய இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார். 

இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு மீண்டும் பாகிஸ்தான் செல்லும் சவூதி இளவரசர், பின்னர் அங்கிருந்து தாய் நாடு திரும்புகிறார்.

முன்னதாக, முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வரும் முன்பு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்று அவர் கூறியிருந்தார்.

சவூதி இளவரசர் இப்போதுதான் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை தருவதால், வழக்கான நடைமுறைகளைக் கைவிட்டு, பிரதமர் மோடி நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று இளவரசரை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com