புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஜம்முவில் செவ்வாய்க்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டங்கள் நீடித்து வருவதால், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி, தற்கொலைப் படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். 40 வீரர்களின் உயிரை பலிகொண்ட இத்தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்முவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும், ஊரடங்கு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு மேற்கு சட்டப் பேரவை இயக்கம் என்ற அமைப்பினர் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். அந்த அமைப்பின் தலைவர் சுனில் டிம்பிள் கூறுகையில், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதப் போரை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. எனவே, பயங்கரவாதிகளை வேரறுக்க மிகப் பெரிய நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.
2 மணி நேரம் ஊரடங்கு தளர்வு: இதனிடையே, ஜம்முவில் 3 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. மேலும், செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த ஜம்மு பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
அறிவுறுத்தல்: மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆளுநர் சத்யபால் மாலிக் சந்தித்து, அவரது ஆலோசகர்கள் விளக்கமளித்தனர்.
அப்போது, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயலும் சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதாக அவரது மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.