பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களை ஊடகங்கள் தியாகி என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட வேண்டும் என்று கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதுதொடர்பாக அபிஷேக் சௌதரி என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழக்க நேரிடும் பட்சத்தில் அவர்கள் குறித்த செய்தியை ஊடகங்கள் வெளியிடும்போது பலி, கொலை என்று குறிப்பிடாமல், தியாகி என்று குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2016ஆம் ஆண்டில் வழக்குரைஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.