
புது தில்லி: துணை ராணுவ வீரர்கள் இனி, தில்லி - ஸ்ரீநகர், ஜம்மு - ஸ்ரீநகர் இடையே விமானத்தில் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரரக்ள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, துணை ராணுவ வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, துணை ராணுவ வீரர்கள் தில்லி - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - தில்லி, ஜம்மு - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - ஜம்மு இடையே பயணிக்கும் போது விமானத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், துணை ராணுவத்தினர் விடுப்பில் செல்லும் போதும் விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் 7.80 லட்சம் துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
இந்த அனுமதியின் மூலம், இதுவரை விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லாத துணை ராணுவத்தில் பணியாற்றும் காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி துணை ஆய்வாளர்கள் இனி விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், துணை ராணுவத்தினரை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது, ஏற்கனவே இவர்களுக்காக இயக்கப்படும் விமான சேவை மட்டுமல்லாமல், ஒரு விமானத்தையே இவர்களுக்காக முன்பதிவு செய்து இயக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் செல்லும் போதும் திரும்பும் போதும்கூட துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்கவும், பொதுமக்கள் செல்லும் விமானங்களில் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு பிறகு டிக்கெட்டுக்கான கட்டணத்தை பெற்றுக் கொள்ளவும் இயலும் என்று மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விமான வசதி இல்லாத இடங்களில் மிகப் பாதுகாப்பான வாகனங்களில் துணை ராணுவத்தினர் பயணிப்பர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...