நாட்டு மக்களிடையே சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வெறுப்புணர்வைப் பரப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆகியவற்றை மறைமுகமாகக் குறிப்பிட்டு, தனது சுட்டுரைப் பக்கத்தில் மம்தா பானர்ஜி புதன்கிழமை வெளியிட்ட பதிவில், சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், அரசமைப்புப் பதவி வகிக்கும் சிலரும் ஆபத்தான கருத்துகள் மூலம் மக்களிடையே வெறுப்புணர்வையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். செய்தியாளர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. மிகவும் கீழ்த்தரமான அரசியலில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது கடந்த 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, அமர்நாத் யாத்திரை, காஷ்மீர் தயாரிப்பு பொருள்கள் உள்பட காஷ்மீர் தொடர்பான அனைத்தையும் கைவிட வேண்டும் என்று மேகாலயா ஆளுநர் தத்தகத்தா ராய் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே மம்தா பானர்ஜி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு, மதத்தின் அடிப்படையில் வெறுப்புணர்வைப் பரப்பி வருவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜக ஆகியவற்றின் மீது மம்தா பானர்ஜி ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார்.