புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னணியின் எம்.பி.யான சாண்டி கல்யாண், ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்துக்கு ஒருமனதாக அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதில்லை. இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் ஆகும். இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரைத் தந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் இந்தியாவுக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்கா இருக்கும். வளர்ச்சி, அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பங்கம் விளைவிக்கும் பயங்கரவாதத்துக்கு எந்தவொரு நாட்டிலும் இடமில்லை என்று கூறியிருந்தார்.
தென்னாப்பிரிக்க அரசியல் கட்சிகள், அரசுசாரா அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வேறொரு நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது அரிதான ஒன்றாகும்.