பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்தி உள்ளது என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் அவர் பேசியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சி அமைவதற்கு முன்னர், சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு ரூ.23,635 கோடி மட்டுமே கூட்டுறவுக் கடன் அளித்தது.
ஆனால், மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்ததற்குப் பிறகு விவசாயிகளுக்கு ரூ.72,051 கோடி கூட்டுறவுக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய அரசைப் போல் மும்மடங்கு ஆகும்.
மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாட்டில் கூட்டுறவு இயக்கங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாஜக ஆட்சியில் கூட்டுறவு இயக்கம் மூலம் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 22 கோடி பேர் பலன் பெறுவர். இதற்காக கூட்டுறவு அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக பாஜக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார். ஆனால், உண்மையான விவசாயக் கடன் தள்ளுபடி என்றால் என்னவென்று நாங்கள் காட்டியிருக்கிறோம்.
கர்நாடக மாநிலத்திலோ ரூ.48,000 கோடி விவசாயக் கடனில் வெறும் ரூ.1,800 கோடி கடன் மட்டும தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்போவதாக பொய்யான வாக்குறுதியை ராகுல் காந்தி அளித்து வருகிறார்.
முந்தைய 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ஒரே ஒரு முறை மட்டும் ரூ.53,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு மட்டும் ரூ.75,000 கோடி அவர்களுக்கு உதவித் தொகையாக வழங்கப்படவிருக்கிறது.
மத்தியில் பாஜக அரசு பத்து ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம்.
சமாஜவாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி ஆகியோரது ஆதரவைப் பெற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரத்தை உலக அளவில் 9-ஆவது நிலைக்கு வீழச் செய்தார்.
அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 6-ஆவது இடத்துக்கு உயர்த்தியுள்ளது என்றார் அமித் ஷா.