நாடு முழுவதும் பல்வேறு வனப் பகுதிகளிலிருந்து பழங்குடியினர் வெளியேற்றப்படும் விவகாரத்தை கனிவுடன் அணுக வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 21 மாநிலங்களிலுள்ள வனப் பகுதிகளிலிருந்து பழங்குடியினர் மற்றும் வனவாசிகள் வெளியேற்றப்படுவது தொடர்பான விவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இந்த மாதம் 13-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதுகுறித்து கொச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்த அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்து ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:
வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்படும் விவகாரத்தை இரக்க சிந்தனையுடன் அணுக வேண்டும்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து ஊடகச் செய்திகள் மூலமாக மட்டுமே எனக்குத் தெரியும். அந்தத் தீர்ப்பை நான் இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை.
எனவே, அதுகுறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது என்றார் அவர்.