உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதிக்கு வரும் மார்ச் 3-ஆம் தேதி பிரதமர் மோடி செல்கிறார்.
இதுகுறித்து பாஜக மக்களவை தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அக்ரஹரி புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மார்ச் 3ஆம் தேதியன்று அமேதி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கோர்பா முன்ஷிகஞ்ச்சில் நடைபெற உள்ள அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து, கெளரிகஞ்ச் அருகே கோஹார் பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார் என்று தெரிவித்தார்.
இதையொட்டி, கட்சித்தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பிரதமர் வருகையையொட்டி தேவையான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை செல்கிறார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பிரதமர் மோடி பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்களில் ஆய்வு நடத்தி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ஸ்மிருதி இரானி ராகுல்காந்திக்கு எதிராக அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.