ரூ.2,700 கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் புதன்கிழமை கூடியது.
அந்தக் கூட்டத்தில், கடற்படைக்கு 3 பயிற்சிக் கப்பல்களை ரூ.2,700 கோடி செலவில் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்தக் கப்பல்கள், பெண்கள் உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பகுதியில் அடிப்படை பயிற்சிகள் அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
இந்தக் கப்பல்களை மருத்துவக் கப்பல்களாகப் பயன்படுத்த முடியும். மேலும், பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும், தேடுதல் பணிகளுக்கும் அந்தக் கப்பல்களைப் பயன்படுத்தலாம்.
அதுதவிர, நெருக்கடி ஏற்படும்போது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் இந்தக் கப்பலைப் பயன்படுத்த முடியும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.