தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு முறிவு (கால் டிராப்) ஏற்படுத்தியதற்காக பிஎஸ்என்எல், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு இதுவரை ரூ.58 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக மாநிலங்களவையில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் மேலும் கூறியதாவது: அழைப்பு முறிவு காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் ரூ.4 லட்சமும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.12 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சார்பில் வாடிக்கையாளர்களின் அழைப்பு முறிவுகள் கண்டறியப்பட்டு, அதன் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் வரையிலான காலாண்டின் போது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சமும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.10.5 லட்சமும், டாடா நிறுவனத்துக்கு ரூ.22.50 லட்சமும், டெலினார் நிறுவனத்துக்கு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.58 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உள்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. செல்லிடப்பேசிகளின் கோபுரங்களில் பயன்படுத்தப்படும் பிடிஎஸ் சாதனங்களின் எண்ணிக்கை கடந்த 2014ஆம் ஆண்டில் 8 லட்சமாக இருந்தது தற்போது 20 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஒரே செல்லிடப்பேசி கோபுரத்தில் வெவ்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிடிஎஸ் சாதனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அழைப்பு
முறிவு தடுக்கப்பட்டு வருகின்றன.
அழைப்பு முறிவை தடுக்கும் வகையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்களை பெறுவதற்காக ஒருங்கிணைந்த குரல் பதிவு அமைப்பு (ஐவிஆர்எஸ்) என்ற அமைப்பை அரசு நிறுவியுள்ளது. அதன்மூலம் 2.5 கோடி நுகர்வோர் புகார் தெரிவித்து பயனடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.