கொச்சி: காவல்துறை உதவியோடு சபரிமலைக்குச் சென்று திரும்பிய 2 பெண்களும், பாதுகாப்புக் காரணங்களால் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
அந்த நாள் முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதற்றம் நிலவியது. 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிந்து (40), கனக துர்கா (39) என்ற இரு பெண்களும் காவல்துறை உதவியோடு ஜனவரி 2ம் தேதி சுவாமி ஐயப்பனை தரிசித்து வந்தனர். இந்த விவரம் வெளியே தெரிய வந்ததை அடுத்து கேரளாவில் போராட்டம் வன்முறையாக மாறியது.
இவ்விரு பெண்களின் வீடுகள் முன்பும் குவிந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர் போராட்டம் காரணமாக இவ்விருவரும் இதுவரை தத்தமது வீடுகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ஐயப்பனை தரிசிக்கும் வரை எங்களுக்கு எந்த பயமும் இருக்கவில்லை. சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. தற்போது பாதுகாப்புக் கருதி எங்களை வீடுகளுக்கு அனுப்பாமல் பாதுகாப்பான இடத்தில் காவல்துறையினர் வைத்துள்ளனர்.
பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்துவது அக்கட்சியின் பொறுப்பு. காவல்துறையை நம்புகிறோம். மேலும் கேரள அரசையும், எங்களது ஜனநாயக சமூகத்தையும் நம்புகிறோம் என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.