கர்நாடகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் வெற்று வாக்குறுதி என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி வருகிறது. இது செயல்படுத்த முடியாத வெற்று வாக்குறுதி.
இந்த விவகாரத்தில் முதல்வர் குமாரசாமி விவசாயிகளுக்கு பொய்களை அள்ளி வீசி வருகிறார். விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய 4 ஆண்டுகள் ஆகும் என்று எனக்கு அரசு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்துவிடுவதாக அரசு கூறுவதில் உண்மையில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் அரசு பொய்யான புள்ளிவிவரங்களைத் தெரிவித்து வருகிறது. அரசின் இந்த திட்டத்தால் விவசாயிகள் பயன்பெறப் போவதில்லை.
உண்மையிலேயே பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அரசுக்கு விருப்பம் இருந்தால், அதுகுறித்த உண்மையான விவரங்களை வெளியிட வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது நிறைவடையும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். வெற்று வாக்குறுதிகளை முன்வைத்து முதல்வர் குமாரசாமி காலத்தைக் கடத்தி வருகிறார் என்றார் அவர்.