ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தை தணிக்கை செய்தது தொடர்பான விவரத்தை மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது.
இதுதொடர்பான விவரத்தை சிஏஜி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் புணேயை சேர்ந்த சமூக ஆர்வலர் விஹார் துர்வே கோரியிருந்தார்.
அதற்கு சிஏஜி அலுவலகம் அளித்திருக்கும் பதிலில், ஒப்பந்தத்தை தணிக்கை செய்யும் அலுவல் நடைபெறுகிறது. அதுதொடர்பான அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(சி) பிரிவின்கீழ், தணிக்கை விவரத்தை அளிக்க முடியாது. அவ்வாறு அளிப்பது நாடாளுமன்ற உரிமையை மீறும் செயலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுத் தொடுத்திருந்தனர். அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.