நாட்டில் உள்ள திறமையான இளைஞர்களின் கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதில் பாஜக உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பாஜக இளைஞரணி பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது. நாட்டில் உள்ள இளம் வாக்காளர்களை கவரும் வகையில், 17 விதமான நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்துவதற்கான பிரசாரக் கூட்டத்தை பாஜக இளைஞரணி தலைவர் பூனம் மகாஜன் தொடங்கி வைத்தார். மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு இந்த பிரசாரம் தொடங்கியது.
இதையொட்டி, பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நாட்டில் உள்ள இளைஞர்களை பாஜகவுக்கு ஆதரவாக திரட்டும் நோக்கில் வெற்றி2019 என்ற கருத்தாக்கத்தை கொண்டு பாஜக இளைஞரணி பிரசாரம் தொடங்கியதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன். திறமையான இளைஞர்களின் விருப்பத்தையும், கனவையும் நிறைவேற்றுவதில் பாஜக உறுதி கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.