ஜம்மு காஷ்மீர்- பஞ்சாப் மாநிலங்களை இணைக்கும் வகையில் ராவி ஆற்றின் குறுக்கே 1.2 கி.மீ.தூரத்துக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள கீதியான் - கந்தியால் இடையிலான உயர்மட்ட பாலத்தை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை (ஜன.22ஆம் தேதி) திறந்து வைக்கிறார்.
இந்த உயர்மட்ட பாலம் ரூ.150 கோடி செலவில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தையும், பஞ்சாப் மாநிலத்தையும் இணைக்கும் இப்பாலத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது.
புதிதாக கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றும்.
பாலம் கட்டப்பட்டதன் மூலம் இப்பகுதி மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில ஆளுநரின் ஆலோசகர் கேவல் குமார் சர்மா சனிக்கிழமை இந்தப் பாலத்தை பார்வையிட்டு, தொடக்க விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த புதிய பாலம் அமைப்பதன் மூலம் ஜம்மு காஷ்மீர்- பஞ்சாப் மாநிலங்களுக்கிடையிலான பயண தூரமும், நேரமும் குறையும். ஜம்மு-கதுவா-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்து எளிதில் சென்று வர இயலும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.