மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
தெலுங்கு தேசம் கட்சியினருடன் சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் கருத்துகளை கேட்க வேண்டும். உடனடியாக, பழைய முறைக்கு அதாவது வாக்குச்சீட்டு முறைக்கு மறுபடியும் திரும்ப வேண்டும்.
2014 மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றதாக லண்டனில் உள்ள மின்னணு தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் தெரிவித்தது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விரைவில் ஒன்று கூடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்தும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண உதவும் இயந்திரம் தொடர்பாகவும் கலந்தாலோசிப்போம்.
நாங்கள் தொழில்நுட்பத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 120 நாடுகளில் பயன்படுத்தப்படவில்லை. 20 நாடுகளில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. இதை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.