மம்தா பானர்ஜி மீம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகி, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் தாமதமாக விடுவிக்கப்பட்டதாக தொரடப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மம்தா பானர்ஜியின் முகத்தை போட்டோஷாப் மென்பொருள் உதவியுடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்துடன் இணைத்து முகநூலில் வெளியிட்டதாக பாஜக யுவ மோர்ச்சா அமைப்பின் நிர்வாகி பிரியங்கா ஷர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மே 10-ஆம் தேதி மேற்கு வங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்
பட்டார்.
பிரியங்கா ஷர்மா மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் அவதூறு பரப்புதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரியங்கா ஷர்மாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதன்பிறகு, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பிரியங்கா ஷர்மாவின் சகோதரர் ராஜீப் சர்மா உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 14-ஆம் தேதி பிரியங்கா ஷர்மாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட பிறகும், சிறையில் இருந்து அவரை விடுவிக்க 24 மணி நேரம் தாமதமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக மேற்கு வங்க அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.