நாடு முழுவதும் 230 மில்லியன் டன்களுக்கும் அதிகமான எண்ணெய் படுகைகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) கண்டறிந்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஓஎன்ஜிசி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி, 459.84 மில்லியன் டன்களுக்கு அதிகமான எண்ணெய் படுகைகளை கண்டறிந்துள்ளது. கடந்த நிதியாண்டில் (2018-19) மார்ச் 31ஆம் தேதி முடிவில், 21.11 மில்லியன் டன் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 65.66 மில்லியன் டன்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
2021-2022ஆம் ஆண்டில், எரிவாயு இறக்குமதி சார்ந்திருப்பை 10 சதவீதம் குறைக்க செயல் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. நமது தேசம் தற்போது 83 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை சார்ந்திருக்கிறது.
இயற்கை எரிவாயு, பெட்ரோல்-டீசல் எரிபொருளுக்கான மாற்று ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுக்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணெய் மற்றும் எரிவாயுவை உள்நாட்டில் தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது என்றார் தர்மேந்திர பிரதான்.