மகாராஷ்டிர மாநிலம், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை 91 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் மராத்வாடா, விதர்பா ஆகிய பிராந்தியங்களில் மேலும் மழை நீட்டிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. பல்கார் மாவட்டத்தில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால், ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
கர்ஜத், லோனாவாலா நகர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வெள்ளம் காரணமாக சரக்கு ரயில் தடம் புரண்டது.
இதனால், அவ்வழியே சென்ற பிற ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
மும்பை-புணே இடையேயான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், தனியார் ஊழியர்களும் பணிக்குச் செல்ல முடியவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.