கர்நாடக சட்டப்பேரவையான விதான சௌதாவுக்குள் நுழைவோரை பரிசோதிக்கும் பாதுகாவலர்கள் தற்போது கண்கொத்திப் பாம்பாக பணியாற்றி வருகிறார்கள்.
காரணம், பார்வையாளர்கள் யாரும் எலுமிச்சைப் பழத்தையோ அல்லது சின்னதாக, உருண்டையாக, மஞ்சள் நிறத்தில் இருக்கும் எதையோ பேரவை வளாகத்துக்குள் கொண்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
எலுமிச்சைப் போன்ற எந்த ஒரு பொருளையும் வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பாதுகாவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மந்திரம் அல்லது தந்திரம் செய்வோரின் மிக முக்கிய ஆயுதம் எலுமிச்சைப் பழம் என்பதால் அதனை சட்டப்பேரவை வளாகத்துக்குள் கொண்டு வர வேண்டாம் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம்.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக எத்தனையோ விரும்பத்தகாத விஷயங்கள் நடந்து வரும் நிலையில், எந்த ஒரு சின்ன விஷயத்தையும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாதநிலையில் உள்ளது அரசு.
எலுமிச்சைப் பழத்தை உள்ளேக் கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். சமீபத்தில் எலுமிச்சை, பச்சை மிளகாய் போன்றவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைக் கதவுகளுக்கு அருகே யாரோ போட்டுவைத்திருந்தார்கைள். இதனால் ஆளுங்கட்சியினர் கவலை அடைந்தனர்.
இதனால்தான் சட்டப்பேரவை வளாகத்துக்குள் எலுமிச்சையைக் கொண்ட வர தடை விதிக்கப்பட்டது. அதே சமயம், பாதுகாவலர்கள் நடத்தும் சோதனையில் ஒரு நாளைக்கு 20 முதல் 25 எலுமிச்சைகளை பார்வையாளர்களிடம் இருந்து பிடுங்கி வைக்கிறார்கள்.
ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி. ராவண்ணா, முதல்வரின் மூத்த சகோதரர் ஆகியோர் தங்களுடன் எலுமிச்சையைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பாதுகாவலர்கள்.