ஜிந்தால் குழுமத்துக்கு நிலம் வழங்குவதைக் கண்டித்து, எம்எல்ஏ பதவியை ஆனந்த் சிங் ராஜிநாமா செய்வதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து மைசூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஜிந்தால் குழுமத்துக்கு நிலம் வழங்குவதைக் கண்டித்து பதவியை ராஜிநாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஆனந்த் சிங் கூறியுள்ளார். ஆனால், அவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதற்கு அரசியல்தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனந்த் சிங் மட்டுமே தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், ரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் யாரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யவில்லை. விரைவில் ஆனந்த் சிங்கைச் சந்தித்து ராஜிநாமா செய்ததற்கான காரணத்தைக் கேட்டு தெரிந்து கொள்வேன் என்றார்.