மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்தில் பராமரிப்புபணியின்போது, ஏற்பட்ட விபத்தில் ஸ்பைஸ்ஜெட் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தா விமான நிலையத்தில் புதன்கிழமை காலை விமானத்தின் வலதுகை பிரதான தரையிறங்கும் கியர் சக்கரப்பகுதியில் தொழில்நுட்ப வல்லுநர் ரோகித் பாண்டே பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவாக கியர் ஹைட்ராலிக் கதவு மூடப்பட்டு, அதன் மடிப்புகளுக்கு இடையே சிக்கிக் கொண்டார். அவரை மீட்பதற்காக விமானத்தின் தரையிறங்கும் கதவுகளை உடைக்க வேண்டியிருந்தது. ஆனால், அது பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறந்தாரா அல்லது என்ன காரணத்தினால் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.