சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் இனி அதிகபட்ச தண்டனை வழங்க வகை செய்யும் வகையில் போக்ஸோ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும்.
நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்ததை அடுத்து, அத்தகைய பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது போக்ஸோ சட்டமாகும்.
போக்ஸோ சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் மூலம் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம். மேலும் சிறார்களை பாலியல் விடியோக்களில் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்ச அபராதமும், சிறைத் தண்டனை விதிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களுக்கு அடுத்தபடியாக, சிறார்களுக்கு எதிராக தற்போது பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதை அடுத்து இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.