புது தில்லி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, பாஜகவில் இணைந்து புதிய இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் ஆரூடம் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சஞ்சய் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.
தோனி பாஜகவில் இணையலாம் என்றும் இது பற்றி பாஜகவில் பல காலமாகப் பேசப்பட்டு வருவதாகவும் கூறிய சஞ்சய், ஆனால் தோனி ஓய்வு பெற்ற பிறகே இது பற்றி உறுதியாகக் கூற முடியும் என்று தெரிவித்தார்.
தோனி எனது நண்பர். உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர், அவரை பாஜகவுக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என்றார்.
தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அப்போது தோனியின் பாஜக பிரவேசம் நடக்கலாம். ஒரு வேலை தோனி பாஜகவில் இணைந்தால், அவர் ஜார்க்கண்டுக்கான பாஜக முதல்வர் வேட்பாளராகக் கூட அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.